
Vinisha Uma Shankar
திருவண்ணாமலையை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவிக்கு சுவீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழலியல் அறக்கட்டளை சார்பில் இளம் வயது கண்டுபிடிப்பாளர்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவிக்கு சுவீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழலியல் அறக்கட்டளை சார்பில் இளம் வயது கண்டுபிடிப்பாளர்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி மூலமாக இயங்கிடக்கூடிய இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்தமைக்காக இவ்விருது வழங்கப்பட இருக்கிறது. இவ்விருதினை சுவீடன் நாட்டின் துணைப்பிரதமர் இசபெல்லா லோவின் இணையவழி நிகழ்ச்சி மூலமாக வழங்கினார்.
இவ்விருதுடன் சுவீடன் நாட்டின் பண மதிப்பில் 100,000 [இந்தியமதிப்பில் 8 லட்சத்து 63 ஆயிரம்] ரொக்கத்தொகையும் வழங்கப்பட இருக்கிறது. இந்தத்தொகை தனது அடுத்தகட்ட அறிவியல் சோதனைகளுக்கு பயன்படும் என வினிஷா உமாசங்கர் தெரிவித்து இருக்கிறார்.

இவ்விருது குறித்து பேசிய வினிஷா உமாசங்கர்,
எனக்கு 5 வயது இருக்கையில் எனது அப்பா அறிவியல் களஞ்சியம் என்ற புத்தகத்தை கொடுத்தார். அந்தப் புத்தகத்தை வாசித்த பிறகு அறிவியல் மீதான ஆர்வம் நாள்தோறும் அதிகரித்தது. தற்போது விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இஸ்திரி பெட்டி கண்டுபிடிப்பில் வண்டியின் மேற்புறத்தில் சூரிய ஒளித்தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும். இவை 100 ஏ எச் திறன் கொண்ட மின்கலனுடன் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த மின்கலன் முழுமையாக மின்னேற்றம் ஆகா 5 மணிநேர சூரிய ஒளி தேவை. இதனைக்கொண்டு 6 மணிநேரம் இஸ்திரி செய்திட முடியும்.
தற்போது இருக்கின்ற இஸ்திரி வண்டிகளில் சூடு ஏற்றுவதற்காக கரிக்கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கண்டுபிடிப்பை வெறும் 2 மாதங்களில் கண்டறிந்து இருக்கிறார் வினிஷா. இதன் வடிவமைப்பை குஜராத்தில் இருக்கும் நேஷனல் இன்னோவேஷன் அறக்கட்டளையின் பொறியாளர்கள் வடிவமைத்து காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளார்கள் என்று பெருமையாக கூறும் வினிஷா அடுத்தகட்டமாக தொடாமல் இயங்கும் கருவிகள் கண்டுபிடிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருக்கிறார்.
இதற்கு முன்னர் பல விருதுகளை வாங்கிக்குவித்துள்ளார் வினிஷா. டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாம் இக்னைட் விருது பெற்றுள்ளார், சிறந்த பெண் கண்டுபிடிப்பாளர் பிரிவில் டாக்டர் பிரதீப் பி தேவனூர் கண்டுபிடிப்பாளர் விருதும் வழங்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களின் பிரிவில் பிரதமரின் ராஷ்டிரிய பால் சக்தி புரஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இளம்வயதிலேயே அறிவியல்மீது ஆர்வம்கொண்டு பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ள திருவண்ணாமலை மாணவி வினிஷா உமாசங்கர் தற்போது சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்து ஸ்வீடன் விருது பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்! pic.twitter.com/K23qWguWtI
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) November 18, 2020
இவரைபாராட்டி தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துச்செய்தி அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எளிமையான மற்றும் பயனுள்ள கண்டுபிடிப்புகளை தொடர்ச்சியாக வினிஷா கண்டுபிடிக்க வேண்டும் என டெக் தமிழன் சார்பாக வாழ்த்துகிறோம்.
Sridaran
Baskaran
Blogger

நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.
