Saturday, May 11, 2024
HomeTech Articlesசந்திரயான் 3 வெற்றியால் இந்தியாவிற்கு கிடைக்கப்போவது என்ன? Chandrayaan 3 In Tamil

சந்திரயான் 3 வெற்றியால் இந்தியாவிற்கு கிடைக்கப்போவது என்ன? Chandrayaan 3 In Tamil

சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக இந்திய விஞ்ஞானிகள் செயல்படுத்தி இந்தியாவிற்கு பெரும் பெருமையை பெற்றுத்தந்துவிட்டார்கள். வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லேண்டர் [Vikram lander] மற்றும் பிரக்யான் ரோவர் [Rover Pragyan] அதன் பணியை இனி செய்திடத்துவங்கும். ஆட்கள் எளிதில் குடியேறிவிட முடியாத நிலவில் ரோவரை வெற்றிகரமாக தரை இறக்கியதன் மூலமாக இந்தியாவிற்கு என்ன கிடைத்துவிடப்போகிறது என்ற கேள்வி பலருக்கும் எழலாம். அப்படி உங்களுக்கு எழுந்திருந்தால் இந்தப்பதிவில் அதற்கான பதிலை பெறலாம். [Chandrayaan 3 In Tamil] 

சந்திரயான் 3 திட்டத்தின் பலன்களை பார்ப்பதற்கு முன்னதாக சந்திரயான் 3 திட்டம் பற்றிய 10 முக்கியமான அம்சங்களை தெரிந்துகொள்வோம்.

சந்திரயான் 3 திட்டத்தின் முக்கிய அம்சங்கள் | 10 Facts About Chandrayaan 3 In Tamil

1. ஜூலை 14 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நிலவிற்கு தனது பயணத்தை துவங்கியது சந்திரயான் 3. 40 நாட்களை கடந்து இன்று [ஆகஸ்ட் 23,2023] வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது சந்திரயான் 3. 

2. பிரக்யான் ரோவரையும் சேர்த்து விக்ரம் லேண்டரின் எடை 1749.86 கிலோகிராம். 1 நிலவு நாட்கள் மட்டும் தான் இதன் ஆயுட்காலம். பூமியின் நாட்களில் சொல்ல வேண்டுமானால் 14 நாட்கள். அதற்கு உள்ளாக அனைத்து பணிகளையும் இது செய்து முடித்துவிட வேண்டும். 

3. சந்திரயான் 3 திட்டத்தின் முக்கிய நோக்கமே, நிலவில் என்னென்ன தனிமங்கள் இருக்கின்றன என்பதை அறிந்துகொள்வது தான். ரோவரில் இருக்கும் Alpha Particle X-ray Spectrometer போன்ற கருவிகளின் உதவியோடு என்னென்ன தனிமங்கள் இருக்கின்றன என்ற ஆய்வு மேற்கொள்ளப்படும். 

4. சந்திரயான் 3 ஐ வெற்றிகரமாக தரை இறக்கியதன் மூலமாக நிலவின் தென்துருவ பகுதியில் விண்கலத்தை தரை இறக்கிய முதல் நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றது. அதேபோல, சீனாவிற்கு அடுத்ததாக வெற்றிகரமாக ரோவரை நிலவில் இயக்கும் நாடு இந்தியா தான். 

chandrayaan-3-moon-orbit

5. பல்வேறு நிறுவனங்களின் பங்களிப்பு சந்திரயான் 3 திட்டத்தில் இருக்கிறது. Larson and Tubro, Mishra Dhatu Nigam, BHEL, Godrej Aerospace, Ankit Aerospace, Walchandnagar Industries போன்ற பல நிறுவனங்களின் பங்களிப்பு இந்தத்திட்டத்தில் இருக்கிறது. 

6. இஸ்ரோவின் தற்போதைய தலைவர் திரு சோமநாத் அவர்களின் பங்கு மிக முக்கியமானது. இது தவிர, திட்ட இயக்குனர் வீர முத்துவேல், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனர் உன்னிகிருஷ்ணன் நாயர், URSC இன் இயக்குனர் சங்கரன் இந்தத்திட்டத்தில் மிக முக்கிய பங்களிப்பு ஆற்றியவர்கள். 

7. 2009 இல் சந்திரயான்-1 விண்கலத்தின் மூலமாக கிடைத்த தரவுகளைப் பயன்படுத்தி, சந்திரனின் துருவப் பகுதிகளின் இருண்ட மற்றும் குளிரான பகுதிகளில் உறைந்த நீர் இருப்பிற்கான ஆதாரத்தை இந்தியா முதன்முறையாகக் கண்டறிந்தது. சந்திரயான்-1, நிலவுக்கான இந்தியாவின் முதல் பயணம். அக்டோபர் 22, 2008 அன்று ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 1 விண்கலம் ஏவப்பட்டது.

8. சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு 2019 ஆம் ஆண்டு சந்திரயான் 2 விண்கலம் ஏவப்பட்டது. ஆனால், லேண்டரை தரை இறக்கும் முயற்சியில் தோல்வி ஏற்பட்டது.ஆனாலும், சுற்றுவட்டப்பாதையில் ஆர்பிட்டர் சுற்றி வந்தது. 

9. சந்திரயான் 3 திட்டத்திற்கு சுமார் 650 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இது மற்ற நாடுகளை ஒப்பிடும் போது மிக மிக குறைவான செலவு என்பது குறிப்பிடத்தக்கது. 

10. 2014 ஆம் ஆண்டு இதேபோல மிகக்குறைவான செலவில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் விண்கலத்தை வெற்றிகரமாக இந்தியா செலுத்தி இருந்தது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் முயற்சியில் சந்திரயான் 3 இன் வெற்றி மிக முக்கியமானது.

சந்திரயான் 3 வெற்றியால் இந்தியாவிற்கு கிடைக்கப்போவது என்ன? | Chandrayaan 3 Success Major Benefits For India In Tamil

1. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கிய நாடு என்கிற பெருமையை இந்தியா பெறுகிறது. விண்வெளி ஆய்வில் இந்தியாவின் திறனை உலகிற்கு பறைசாற்ற சந்திரயான் 3 இன் வெற்றி இன்றியமையாதது. 

2. விண்வெளி ஆராய்ச்சி, தொழில்நுட்ப திறன் ஆகியவற்றில் இந்தியா முன்னேறி இருக்கிறது என்பதை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்ட சந்திரயான் 3 இன் வெற்றி உதவும். உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயருவதோடு, இந்தியாவின் பொருளாதார உயர்விலும் இதன் பங்களிப்பு இருக்கும். 

3. நிலவில் யாருமே இல்லை. ஆகையால் இதற்கு செய்யப்படும் செலவு வீணானது என்ற எண்ணம் முற்றிலும் தவறானது. இதுபோன்ற வெற்றிகள் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும். அதேபோல, நிலவில் கிடைக்கும் மூலக்கூறுகளால் அதிகமான பயன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதிலே, இந்தியா முன்னிலை வகிப்பது இந்தியர்களுக்கு மிகவும் நல்லது. 

Chandrayaan 3 moon landing step by step process

4. சந்திராயன் 3 வெற்றியின் மூலமாக இந்தியாவின் விண்வெளி திட்டங்களுக்கு போதிய நிதி ஆதாரம், முதலீடு போன்றவை எளிதாக கிடைக்கும். இதன் மூலமாக, விண்வெளித்துறையில் இந்தியா மேலும் பல உச்சத்தை அடையலாம். 

5. ஏற்கனவே பல சாதனைகளை தொடர்ச்சியாக இஸ்ரோ படைத்து வருகிறது. சந்திரயான் 3 இன் வெற்றி போன்ற விசயங்கள் இந்தியாவின் திறனை உலகிற்கு பறை சாற்றும். இந்தியா மீதான உலக நாடுகளின் பார்வை இதன் மூலமாக மாறும். 

6. நிலவில் உள்ள தாதுப்பொருள்களை ஆராய்வதன் மூலமாக நிலவை பற்றி அறிய முடியும். நிலவு மட்டுமல்லாது, பிரபஞ்சம் பற்றிய ஆராய்ச்சியிலும் இதன் பயன்பாடு இருக்கும். 

7. சந்திரயான் 2 தோல்வி அடைந்தபிறகு இந்தியா தனது முயற்சியை கைவிடவில்லை. யாரும் நினைத்திடாத விதத்தில் அடுத்த சில ஆண்டுகளிலேயே சந்திரயான் 3 ஐ வெற்றிகரமாக தரை இறக்கி சாதித்துவிட்டது. அதுவும், மிகக்குறைந்த செலவில். விண்வெளி ஆராய்ச்சிக்கு இது மிகவும் முக்கியமான விசயம். 

8. இப்போது நாம் நிலவில் வெற்றிகரமாக ரோவரை தரை இறக்கி இருக்கிறோம். அடுத்து வரும் தலைமுறை இன்னும் பல ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு இது ஓர் அடித்தளமாக இருக்கும். குறிப்பாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது உள்ளிட்ட விசயங்களுக்கு இந்த வெற்றி படிக்கட்டாக அமையும். இப்போது நாம் இதனை செய்திடாவிட்டால் எதிர்காலத்தில் நாம் மிகவும் பின்னடைந்து இருப்போம். 

மிகப்பெரிய சாதனையை இந்திய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக சாதித்துக்காட்டியுள்ளனர். ஒவ்வொரு இந்தியரும் சந்திரயான் 3 இன் வெற்றியை நினைத்து பெருமை கொள்ள வேண்டும். இந்த வெற்றியின் மூலமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் மிகப்பெரிய முன்னேற்றங்கள் உண்டாகும்.

TECH TAMILAN

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular