Saturday, May 11, 2024
HomeBiographyநிகோலா டெஸ்லா வாழ்க்கை வரலாறு | Nikola Tesla Biography in Tamil

நிகோலா டெஸ்லா வாழ்க்கை வரலாறு | Nikola Tesla Biography in Tamil

Nikola Tesla

உங்கள் வீட்டில் மின்விளக்கை ஆன் செய்திடும்போது, தொலைக்காட்சியை ஆன் செய்திடும்போது, துணி துவைக்கும் இயந்திரத்தை ஆன் செய்திடும் போது இதற்கெல்லாம் காரணமானவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என நினைத்தால் ‘நிகோலா டெஸ்லா’ விற்குத் தான் நன்றி சொல்லியாக வேண்டும். மின்சாரத்தால் இயங்கக்கூடிய சாதனங்களை பயன்படுத்த நாம் பயன்படுத்தும் AC/Alternative Current ஐ கண்டறிந்தவர் தான் நிகோலா டெஸ்லா.



இந்த உலகில் வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தியவர்களின் பட்டியலை வாசித்தால் ஹென்றி போர்டு, ரைட் பிரதர்ஸ், தாமஸ் ஆல்வா எடிசன் என பட்டியல் விரியும். இன்றைய உலகில் நாம் பயன்படுத்தும் 80% மின்சாரத்தால் இயங்கும் பொருள்களுக்கு அடித்தளமிட்டவர் என்ற இன்று நாம் அவரை அந்தப்பட்டியலில் இணைந்தாலும் கூட அவர் வாழ்ந்த காலத்தில் அவர் அவ்வளவாக கண்டுகொள்ளப்படவில்லை என்பதே உண்மை. ஆமாம், இறப்பதற்கு முன்பு 10 ஆண்டுகள் ஒரு ஹோட்டல் அறையிலேயே தங்கியிருந்தார் டெஸ்லா. டெஸ்லாவின் சோகமான கதைகளை நாம் பேசும்போதெல்லாம் மின்சாரம் கண்டுபிடிப்பில் அவருக்கு போட்டியாக விளங்கிய தாமஸ் ஆல்வா எடிசன் பெயரும் அதிலே இணைந்துவிடுகிறது. இருவருக்கும் இடையே அப்படியென்ன நடந்தது? பெரிய பெரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருந்தாலும் பெரிய வாழ்வு வாழாத நபராக நிகோலா டெஸ்லா மறைய என்ன காரணம்? வாருங்கள் அலசலாம்.

உங்கள் வீட்டில் மின்விளக்கை ஆன் செய்திடும்போது, தொலைக்காட்சியை ஆன் செய்திடும்போது, துணி துவைக்கும் இயந்திரத்தை ஆன் செய்திடும் போது இதற்கெல்லாம் காரணமானவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என நினைத்தால் ‘நிகோலா டெஸ்லா’ விற்குத் தான் நன்றி சொல்லியாக வேண்டும். மின்சாரத்தால் இயங்கக்கூடிய சாதனங்களை பயன்படுத்த நாம் பயன்படுத்தும் AC/Alternative Current ஐ கண்டறிந்தவர் தான் நிகோலா டெஸ்லா.

ஜனவரி 07,1943 அன்று நியூயார்க்கர் எனும் தங்கும் விடுதியில் வேலை பார்க்கும் ஒருவர் 3327 என்ற அறைக்கு சென்று பார்க்கும் போது அங்கே 86 வயதான ஒருவர் இறந்து கிடக்கிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளாகவே அந்த அறையைத்தான் தங்கும் வீடாகவே பயன்படுத்தி வந்துள்ளார். அவர் சில காலமாகவே பால் மற்றும் பிஸ்கட் இவைகளையே உண்டு வாழ்க்கையை நடத்தியுள்ளார். ஆளே அடையாளம் தெரியாத நிலையில் பணம் கொஞ்சமும் இல்லாமல் ஒரு ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தார், நாம் இன்று அடையாளம் கண்டு நினைவு கூறும் மாபெரும் கண்டுபிடிப்பாளர் டெஸ்லா. நீங்கள் இந்தக்கட்டுரையை முழுமையாக வாசித்து முடிக்கும் போது அதற்கான காரணத்தை அறிவீர்கள்.

நிகோலா டெஸ்லா, 1856 ஜூலை மாதம் 10 ஆம் நாள் தற்போதைய குரோஷியா இருக்கும் பகுதியில் உள்ள ஸ்மில்ஜன் [Smiljan, Croatia] எனும் இடத்தில் பிறந்தார். வரலாற்றில் பெரும் மாற்றம் உண்டாக்கப்போகும் ஒருவர் பிறக்கும் போது அதற்கான அறிகுறிகளை காலம் உருவாக்கிக்கொடுப்பது உண்டு. அதை பல சாதனையாளர்களின் பிறப்பு சம்பவங்கள் நமக்கு காட்டியுள்ளன. நிகோலா டெஸ்லா பிறக்கும் நேரத்தில் அந்த இடத்தில் கடுமையான புயல், மின்னல், மழை என வானிலை மோசமாக இருந்துள்ளது. அப்போது பிரசவத்தை பார்த்துக்கொண்டிருக்கும் பணிப்பெண், இந்த மாதிரி அபசகுனமான நேரத்திலா குழந்தை பிறக்க வேண்டும் என வருத்தத்தோடு கூறினாள். டெஸ்லாவின் அம்மா அப்போது வெளிப்புறத்தில் பார்த்தார் அப்போது மின்னல்களும் வெட்டிக்கொண்டிருப்பதை கண்ட அவர் ‘இவன் இருளின் குழந்தை அல்ல. இவன் ஒளியின் குழந்தை’ என கூறினார்.

தான் இவ்வளவு பெரிய விஞ்ஞானியாக வருவதற்கு காரணம் தனது அம்மா டுகா மேண்டிக் தான் என குறிப்பிடும் டெஸ்லா தனது அம்மாவுக்கு Eidetic memory எனும் சிறப்புத்திறன் இருந்ததாக குறிப்பிடுகிறார். Eidetic memory [ஈடெடிக் நினைவகம்] என்பது எப்போது ஒருமுறை பார்த்த விசயங்களை துல்லியமாக நினைவில் கொண்டு வந்து விளக்குவது. கூடவே, பெரிதாக படிக்காத தனது அம்மா வீட்டில் இருக்கும் போது வீட்டிற்கு தேவையான சில உபகரணங்களை தானே உருவாக்கியுள்ளார் எனவும் நினைவு கூறுகிறார். டெஸ்லாவின் அப்பா மிலுடின் டெஸ்லா ஒரு பாதிரியார், தனது மகன் டெஸ்லாவும் தன்னைப்போலவே பாதிரியாராக வர வேண்டும் என்பதே அவரது விருப்பம். ஆனால் நிகோலா டெஸ்லாவிற்கோ பொறியியல் துறையில் தான் ஆர்வம் இருந்தது. ஒருமுறை நிகோலா டெஸ்லாவிற்கு காலரா காரணமாக உடல்நிலை மிகவும் மோசமாக போனது. அந்த சமயத்தில் மகனை ஊக்குவிக்க ‘நீ மட்டும் பிழைத்து வந்தால் நீ விரும்பிய பொறியியல் படிப்பையே படிக்கலாம்’ என உறுதியளித்தார். எதிர்பாராதவிதமாக நிகோலா டெஸ்லா பிழைத்து வந்தார். அப்பா உறுதி அளித்தபடியே பொறியியல் படிப்பிற்கு பச்சைக்கொடியும் காட்டினார்.

பொறியியல் படிக்க ஆஸ்திரியா நாட்டில் இருக்கும் கிராஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அங்கே மிகவும் ஆர்வத்தோடு பயிலவும் ஆரம்பித்தார். இயல்பிலேயே அவரது அம்மாவின் நினைவுத்திறன் டெஸ்லாவிற்கும் இருந்தது. ஆகவே கணிதம் அவருக்கு எளிதானதாக இருந்தது. 8 மொழிகள் அறிந்தவராகவும் அவர் இருந்தார். படிப்பில் சுட்டியாக இருந்தபோதும் கூட அவர் முழுமையாக படிப்பை முடிக்கவில்லை. சூதாட்டத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தபடியால் அவர் குடும்பத்தோடு கொண்டிருந்த தொடர்பையும் இழந்தார். அவர் எங்கிருக்கிறார் எப்படி இருக்கிறார் என்பது எவருக்கும் தெரியவில்லை. அவரது நண்பர்களுக்கு கூட அது தெரியவில்லை. அவர் ஆற்றில் விழுந்து இறந்திருக்கலாம் என்று கூட அவர்கள் கருதினார்கள்.

ஐரோப்பா நாட்டிற்கு சென்ற டெஸ்லா அங்கே ஒரு தொலைபேசி நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக பணிக்கு சேர்ந்தார். 1882 ஆம் ஆண்டு பாரிஸ் நகரத்தில் குடியேறினார் டெஸ்லா. அங்கே எடிசனின் எலெட்ரிக் நிறுவனத்தின் பிரெஞ்சு கிளையில் பணிக்கு சேர்ந்தார். அங்கே அவர் வீடுகளுக்குள் மின்விளக்கு பொருத்துவது போன்ற வேலையில் ஈடுபடுத்தப்பட்டார். அவரது மேல் அதிகாரிகள் அவரது திறமையைக் கண்டு சிக்கலான பணிகளில் அவரை சிக்கலான பணிகளில் ஈடுபடுத்த ஆரம்பித்தனர். டைனமோ மற்றும் மோட்டார் தயாரிக்கும் வேலைகளில் அவர் ஈடுபடுத்தப்பட்டார். அவருக்கிருந்த திறமையின் காரணமாக எடிசனின் பிற கிளைகளில் உள்ள பிரச்சனைகளை சரி செய்யவும் அவர் அனுப்பப்பட்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து 1884 ஆம் வருடம் டெஸ்லாவின் மேனேஜர் ஒரு வாய்ப்பை வழங்கினார். நியூயார்க் நகரத்தில் செயல்பட்டு வரும் எடிசன் மெஷின் ஒர்க்ஸ் இல் பணி வாய்ப்பு இருப்பதாக கூறினார். அதனை ஏற்று டெஸ்லா அமெரிக்கா புறப்பட்டார்.

அவர் அமெரிக்காவை வந்தடைந்த போது அவரிடம் வெறும் 4 சென்ட் பணமே இருந்தது. பயணத்தின் போது அவர் தன்னிடமிருந்த பணத்தை தவறவிட்டு இருந்தார். எடிசனின் நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றினார் டெஸ்லா. இதனால் டெஸ்லாவின் மீது எடிசனுக்கு எடிசன் மீது டெஸ்லாவிற்கும் நல்ல மதிப்பு இருந்தது. எடிசன் ஒருமுறை டெஸ்லாவை இப்படி குறிப்பிட்டார் ‘என்னிடம் பல உதவியாளர்கள் பணி புரிந்துள்ளனர். ஆனால் என் மனதை வென்றவர் டெஸ்லா தான்’ என்றார். இந்த நன்மதிப்பு ‘மின்சாரம்’ பற்றிய கருத்து மோதலுக்கு பிறகு மறைந்தது. மின்சாரம் எப்படி இருக்கும், அதனை எப்படி பிற இடங்களுக்கு அனுப்பலாம் என்பதில் இருவருக்குள்ளும் கருத்து மோதல் ஏற்பட்டது.

எடிசன் நேரடி மின்னோட்டத்தின் [DC] ஆராதரவாளராக இருந்தார். நேரடி மின்னோட்டத்தில்  மின்சாரம் ஒரே திசையில் மட்டும் பாயும். ஆனால் டெஸ்லாவோ மாற்று மின்னோட்டத்தின்  (AC) ஆதரவாளராக இருந்தார். இதில் மின்சாரம் குறிப்பிட்ட இடைவெளியில் திசையை மாற்றிக்கொள்ளும். இன்று நம் வீடுகளுக்கு பல கிலோமீட்டரில் இருந்து மின்சாரம் அனுப்பப்படுவது டெஸ்லாவின் AC முறையில் தான். இந்த முறையை பயன்படுத்துவதனால் மின்சார இழப்பு பெருமளவில் குறைகிறது மற்றும் எவ்வளவு தொலைவிற்கு மின்சாரத்தை கொண்டு செல்ல முடியும் என்பதனால் தான் டெஸ்லாவை அனைவரும் நினைவு கூற வேண்டும் என இப்போதும் சொல்கிறோம்.

டெஸ்லாவின் AC பல சிறப்பு அம்சங்களை கொண்டிருப்பது எடிசனுக்கும் தெரியும். ஆனால் அவர் தான் கண்டறிந்த DC தான் சிறந்தது என்பதை வலியுறுத்திக்கொண்டே இருந்தார். இதற்குக்  காரணம், அவர் காப்புரிமை வாங்கி வைத்திருந்த சாதனங்கள் DC யில் இயங்கும் விதத்திலேயே வடிவமைக்கப்பட்டு இருந்தது தான். இதற்கிடையில் டெஸ்லாவின் மேனேஜர் எடிசன் நிறுவனத்தில் DC யில் இயங்கும் ஒரு மெசினை மேம்படுத்தி தரும்படி கேட்டுக்கொண்டார். அதை செய்துதந்தால் $50,000 தருவதாகவும் சொன்னார். ஆனால் மெசினை டெஸ்லா மேம்படுத்தி கொடுத்த பிறகு சொன்னபடி $50,000 தரப்படவில்லை. இதற்கு பிறகு எடிசனுடன்  ஏற்பட்ட சில மனஸ்தாபங்களால் அங்கிருந்து வெளியேறி 1885 இல் சொந்தமாக ஒரு எலெக்ட்ரிக் நிறுவனத்தை ஆரம்பித்தார் டெஸ்லா. ஆனால் நிதிச்சிக்கல்களால் அதுவும் கைகூடவில்லை. இதனால் கையில் ஒரு ரூபாய் கூட இல்லாதவராக அன்றாட பொழுதை கழிக்க 2 டாலர் கிடைக்கும் வேலைதேடி அலைந்தார் டெஸ்லா.

ஆனால் காலம் அவருக்கு மீண்டுமொரு வாய்ப்பை அளித்தது. 1887 ஆம் ஆண்டு AC மின்சாரத்தால் இயங்கக்கூடிய மின்மோட்டார் ஒன்றினை வடிமைத்தார் டெஸ்லா. இந்த மோட்டார் மின் ஆற்றலை குறைந்த இழப்பில் இயக்க ஆற்றலாக மாற்றித்தந்தது. இந்த மோட்டார் தான் தற்போது எலன் மஸ்க் அவர்களின் டெஸ்லா கார்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவரது நினைவாகவே மஸ்க் கார் நிறுவனத்திற்கு டெஸ்லா என பெயரிட்டார்.

எலெட்ரிக் சந்தையில் கொடிகட்டி பறந்த ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் டெஸ்லாவின் AC மோட்டார் பற்றிய செய்தியை அறிந்தார். இந்த மோட்டாரை கொண்டு எடிசனின் DC மோட்டாருக்கு சவால் கொடுக்க முடியும் என நம்பினார். இவர்கள் இருவருக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. சுமார் $60,000 க்கு காப்புரிமை பரிமாறிக்கொள்ளப்பட்டது. அதோடு பங்கு மதிப்பும் லாயல்டியும் வழங்கப்பட்டது. மேலும் அந்த நிறுவனம் டெஸ்லாவை ஆலோசகராகவும் பணியில் அமர்த்திக்கொண்டது. அவருக்கு அப்போது மாதம் ஒன்றுக்கு $2000 ஊதியமாக வழங்கப்பட்டது. தற்போதைய மதிப்பில் $50,000. இந்த தருணத்தில் தான் டெஸ்லாவிற்கும் எடிசனுக்கு நேரடியாக போட்டி ஆரம்பித்தது.

டெஸ்லாவின் AC மின்சாரம் மக்களுக்கு மிகவும் ஆபத்தானது என்பதை மக்களிடம் பரப்புவதற்கு நேரடியாகவும் ரகசியமாகவும் பல வேலைகளை செய்தார். யானை உள்ளிட்ட விலங்குகளுக்கு பொதுவெளியில் AC மின்சாரம் பாய்ச்சி இறக்க வைப்பது, எலெட்ரிக் நாற்காலியை பயன்படுத்தி AC மின்சாரம் பற்றிய பயத்தை மக்களிடத்தில் கொண்டு போனது என பல வேலைகளை செய்தார். எடிசன் இப்படி பல்வேறு வேலைகளை வெஸ்டிங்ஹவுஸ் & டெஸ்லா நிறுவனத்திற்கு எதிராக செய்துகொண்டிருக்க அவர்களோ வேறு வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் World columbian Exposition எனும் நிகழ்வை நடத்த வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள். இது அமெரிக்காவை கண்டறிந்த கொலம்பஸ் அவர்களின் 400 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நடத்தப்பட்டது. 27 மில்லியன் மக்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வின் மூலமாக ஒரு விசயம் நிறுவப்பட்டது. ஆமாம், எதிர்கால உலகத்தை ஒளிர செய்யப்போவது AC மின்சாரம் தான் என்பது நிறுவப்பட்டது.

டெஸ்லா மேலும் வெற்றிகளை சுவைக்க ஆரம்பித்தார். ஆமாம், AC மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய ஆலை ஒன்றினை நயாகரா பகுதியில் நிறுவினார்கள். இதன் மூலமாக மின்சாரம் வெற்றிகரமாக எடுக்கப்பட்டது. ஆனால் டெஸ்லாவின் ஏறுமுகத்தில் சறுக்கல்கள் விழத்துவங்கியது, வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனம் கடும் நிதி சிக்கலில் மாட்டிக்கொண்டது. 10 மில்லியன் டாலர் அளவுக்கு கடன்சுமை ஏற்பட்டது. 1897 ஆம் ஆண்டு ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் டெஸ்லாவிடம் சென்று லாயல்டியை விட்டுத்தருமாறு கேட்டுக்கொண்டார். இதனால் தனக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்பதையும் அறிந்து டெஸ்லா அதற்கு ஒப்புக்கொண்டார். இதற்கு மிக முக்கியக்காரணம், அவர் ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் தனது நண்பராக ஏற்றுக்கொண்டிருந்தது தான். நண்பரின் நிறுவனம் அழிந்துவிடக்கூடாது என்பதற்காக இதனை ஒப்புக்கொண்டார். அவர் விட்டுக்கொடுத்தது சுமார் 12 மில்லியன் டாலர், இன்றைய மதிப்பில் 300 மில்லியன் டாலர்கள்.

டெஸ்லாவின் உதவிக்கு கைமாறாக டெஸ்லாவின் AC காப்புரிமையை காலம் முழுவதும் பயன்படுத்திக்கொள்ள வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனம் 2,16,000 டாலர்களை கொடுத்தது. தனக்கு கிடைத்த பணத்தைக்கொண்டு நியூயார்க் நகரத்தின் பல்வேறு இடங்களில் ஆய்வு நிலையங்களை துவங்கினார். டெஸ்லா பெயரில் மட்டும் 300 க்கும் மேற்பட்ட காப்புரிமைகள் இருந்தன. எக்ஸ் ரே தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களில் வல்லவராக இருந்தார் டெஸ்லா. டெஸ்லாவின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று டெஸ்லா காயில் டெஸ்லா சுருள் [tesla coil]. இதன் மூலமாக அதிக மின் அழுத்தம் கொண்ட மின்சாரத்தை உருவாக்க முடியும். இதனைக்கொண்டு ரேடியோ அலைகளை குறிப்பிட்ட அதிர்வெண்ணில் அனுப்பவும் பெறவும் முடியும். டெஸ்லா முதன் முதலாக ரேடியோ சிக்னலை அனுப்ப தயாராக ஆனபோது தான் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. 1895 இல் ஏற்பட்ட அந்த விபத்தில் பல ஆண்டுகால உழைப்பும் சாதனங்களும் வீணாய் போனது. அதன் பிறகு டெஸ்லா ரேடியோ விற்கு காப்புரிமை பெற விண்ணப்பிக்கவில்லை.

மிகப்பெரிய சறுக்கலை சந்தித்திருந்தார் டெஸ்லா. ஆனாலும் கூட அவர் ரேடியோ கண்டுபிடிப்பதில் ஈடுபட்டார். அதேசமயம் இத்தாலியை சேர்ந்த  மார்க்கோனி என்பவரும் இங்கிலாந்தில் ரேடியோ கண்டுபிடிப்பில் ஈடுபட்டு வந்தார். அவர் அமெரிக்காவில் ரேடியோ விற்கான காப்புரிமையை பெற விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அவருடைய கருவி டெஸ்லாவின் கருவியோடு ஒத்துப்போவது போல இருந்தபடியால் அதற்கு காப்புரிமை கொடுக்கப்படவில்லை. மார்கோனியின் ரேடியோ பற்றி அறிந்திருந்த எடிசன் அதற்கு தனது ஆதரவை காட்ட ஆரம்பித்தார். அமெரிக்க காப்புரிமை நிறுவனம் திடீரென மார்கோனிக்கு ரேடியோ விற்கான காப்புரிமையை வழங்கியது. இதற்கு பின்னால் செயல்பட்டது எடிசன் என்பது அனைவர்க்கும் தெரியும். மார்கோனிக்கு 1911 இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. பிறகு மார்க்கோனி மீது வழக்கு தொடர்ந்தார் டெஸ்லா. டெஸ்லா இறந்த பிறகு அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது.

இந்த ரேடியோ நிகழ்வுகளால் மிகவும் நொந்துபோனார் டெஸ்லா. இதன் பிறகு வயர்லெஸ் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த மிகப்பெரிய கோபுரத்தை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார் டெஸ்லா. நியூயார்க்கில் அதற்கான வேலைகள் துவங்கின. ஆனால் பாதியிலேயே அதற்கு பணம் கொடுக்க வந்தவர்கள் பின்வாங்கிக்கொள்ள திட்டம் கைவிடப்பட்டது. அவர்கள் மார்கோனியின் ரேடியோ திட்டத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள். இதனால் பொருளாதார நெருக்கடியில் சிக்கினார் டெஸ்லா. இதுபோன்ற பின்னடைவுகளால் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தார் டெஸ்லா. 1933 முதல் நியூயார்க்கர் தங்கும் விடுதியில் ஒரு அறையில் தங்க ஆரம்பித்தார் டெஸ்லா. வெஸ்டிங்ஹவுஸ் கார்ப்பரேஷன் அவரை ஆலோசகராக பணியமர்த்தி  அவர் தங்கும் விடுதிக்கான கட்டணத்தை செலுத்தி வந்தது.

டெஸ்லா ஒன்றும் இல்லாதவராக தனது இறுதிக்காலத்தை அடைந்ததற்கு அவர் சிறந்த முதலாளித்துவவாதியாக இல்லாமல் இருந்தது தான். அதற்கு காரணம், அவர் பணத்தின் மீது எப்போதும் அக்கறை கொண்டதில்லை. மாறாக, மனித இனத்தின் மேம்பாட்டின் மீது தான் அதிக அக்கறை கொண்டவராக அவர் இருந்தார். அவர் இந்த உலகை மாற்றிட தனது பங்கை வெகு சிறப்பாகவே செய்திருக்கிறார்.

நன்றி நிகோலா டெஸ்லா.





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular