QR Code Scam
ஒருவரிடமிருந்து பணத்தை பெறுவதற்கு நாம் UPI PIN எண்ணையோ அல்லது OTP போன்றவற்றையோ எக்காரணத்தைக்கொண்டும் பகிர வேண்டியது இல்லை. அப்படி கேட்கும் பட்சத்தில் அதனை திருட்டுக்கும்பல் என நினைத்து தவிர்த்துவிடுங்கள்.
சில தினங்களுக்கு முன்பாக வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் பெங்களூருவில் இந்தியன் ஆர்மியில் பணியாற்றுகிறேன் என்று சொல்லிக்கொண்டு QR Code பண மோசடியில் ஈடுபட்ட கும்பலின் ஏமாற்றுமுறை குறித்து தெளிவாக விளக்கப்பட்டு இருந்தது. இந்தப்பதிவில் குறிப்பிடப்பட்டு இருக்கும் சம்பவம் டிசம்பர்,2019 இல் நடைபெற்று இருக்கிறது என்றாலும் கூட அதனை அப்படியே நாம் விட்டுவிட முடியாது. காவல்துறை அதிகாரிகளும் வங்கிகளும் எத்தனையோ அறிவுரைகளை பொதுமக்களுக்கு வழங்கினாலும் கூட இதுபோன்ற மோசடிகளில் மக்கள் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது.
காவல்துறை இதுபோன்ற பண திருட்டுகளை கவனித்து வந்தாலும் கூட ஏதோ ஒரு மூலையில் விவரவற்ற ஒருவர் ஏமாறுவது தொடர் கதையாகி வருகிறது. இந்தப்பதிவை படிக்கிறவர்கள் தயவு கூர்ந்து பிறருக்கும் பகிருங்கள்.
பெங்களூருவில் நடைபெற்ற சம்பவம் என்ன?
டிசம்பர், 2019 இல் பெங்களூருவில் வசிக்கும் 30 வயது இளைஞர் திலிப் பந்தாரி தன்னுடைய கட்டில் மெத்தையை விற்பதற்காக ஆன்லைனில் விளம்பரம் கொடுக்கிறார். அவர் விளம்பரம் கொடுத்த சில மணி நேரங்களிலேயே அவரை தொடர்புகொள்ளும் லக்ஷ்மணன் சிங் தான் இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதாகவும் தனக்கு இந்த கட்டில் மெத்தை பிடித்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இதனை 23,500 ரூபாய்க்கு வாங்கிக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
தற்போது பணியில் இருப்பதாகவும் ஆகவே நேரடியாக வந்து வாங்கிக்கொள்ள முடியாது எனவும் கூறிய சிங் இப்போதைக்கு தான் முழு பணத்தையும் அனுப்பி விடுவதாகவும் பின்னர் விடுமுறைக்கு வரும்போது கட்டில் மெத்தையை பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
அடுத்த சில நிமிடங்களில் QR Code ஒன்றினை லக்ஷ்மணன் சிங் அனுப்பி அதனை ஸ்கேன் செய்திடுமாறும் அப்போது தான் தன்னால் உங்களுக்கு பணம் அனுப்ப முடியும் என்றும் கூறுகிறார். QR Code முறையில் பணம் அனுப்புவது பற்றி பெரிய அளவில் தெரிந்திடாத திலிப் பந்தாரி, சிங் சொன்னதைப்போலவே செய்கிறார். அவர் செய்துமுடித்தவுடன் திலிப் பந்தாரி கணக்கில் இருந்து 10000 எடுக்கப்பட்டு விட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த திலிப் பந்தாரி லக்ஷ்மணன் சிங்க்கு அழைத்து விவரத்தை சொல்கிறார். உடனே மன்னிப்பு கேட்டுக்கொள்ளும் லக்ஷ்மணன் சிங் இன்னொரு QR Code ஒன்றினை அனுப்பி ஸ்கேன் செய்ய சொல்கிறார். இதை செய்தால் 23,500 மற்றும் ஏற்கனவே எடுக்கப்பட்ட 10000 ஆகியவற்றை அனுப்பி விடுவதாக சொல்ல திலிப் பந்தாரி ஸ்கேன் செய்கிறார். மீண்டும் திலிப் பந்தாரி கணக்கில் இருந்து 40000 ரூபாய் எடுக்கப்பட்டு விட்டது.
இப்போது திலிப் பந்தாரி லக்ஷ்மணன் சிங்கை தொடர்பு கொள்ள முயற்சித்தால் அவருடைய மொபைல் எண் அணைத்து வைக்கப்பட்டு இருக்கிறது. பிறகு தான் இது ஒருவகையான திருட்டு என்பதை உணர்ந்த திலிப் பந்தாரி காவல்துறையில் புகார் அளித்தார். அந்த ஒரு வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 5 புகார்கள் பெங்களூருவில் பதிவாகியது.
QR Code பண மோசடியில் இருந்து தப்பித்துக்கொள்வது எப்படி?
QR Code பண மோசடி குறித்து தெரிந்துகொள்வதற்கு முன்பாக QR Code என்றால் என்ன அதை உருவாக்குவது எப்படி என்று இந்தக்கட்டுரையை படித்து தெரிந்துகொள்ளுங்கள். ஆன்லைன் பண பரிமாற்றம் கொண்டுவரப்பட்டதன் மிக முக்கியமான நோக்கம் எளிமையான பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கத்தான். ஆனால் அதில் இருக்கும் சில விசயங்களை பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் செயல்களை சில கும்பல்கள் செய்துவருகின்றன, அது தவிர்க்கப்பட முடியாதது. சரி இவர்கள் எப்படி இந்த திருட்டை அரங்கேற்றுகிறார்கள் என்று பார்ப்போம்.
>> இவர்கள் ஒரு QR Code ஐ உங்களது வாட்ஸ்ஆப் அல்லது புகைப்படங்களை பகிரும் ஏதேனும் ஒரு ஆப் வாயிலாக அனுப்புவார்கள்
>> அந்த QR Code ஐ ஸ்கேன் செய்து அதில் எவ்வளவு தொகை, PIN ஆகியவற்றை பதிவு செய்தால் உங்களது வங்கிக்கணக்குக்கு இலவசமாக குறிப்பிட்ட அளவு பணம் [free rewards] உங்களது வங்கிக்கணக்கில் ஏறும் என குறிப்பிட்டு இருப்பார்கள்.
>> ஆனால் அவர்கள் நீங்கள் மேலுள்ள தகவலை எல்லாம் பதிவு செய்தவுடன் அந்தப்பணம் அவர்களுக்கு சென்று சேரும் விதமாக QR Code ஐ சில ஆப்களில் உருவாக்கி இருப்பார்கள்.
>> இன்னும் சிலரோ நாங்கள் உங்களுக்கு இவ்வளவு பரிசுத்தொகையை அனுப்பி இருக்கிறோம். அதனை நீங்கள் பெற வேண்டும் என்றால் இந்த QR Code ஐ ஸ்கேன் செய்து PIN எண்ணை அழுத்த வேண்டும் என இருக்கும்.
>> நீங்கள் PIN எண்ணை அழுத்தியவுடன் அவர்கள் குறிப்பிட்டிருந்த பணம் உங்களது கணக்கில் இருந்து எடுக்கப்பட்டு அவர்களுக்கு அனுப்பப்படும்.
இப்படிப்பட்ட திருடர்களின் முதல் படி என்னவாக இருக்கும் என்றால் உங்களது ஆசையை தூண்டுவதாகத்தான் இருக்கும். ஆமாம், இலவசமாக கிடைக்கிறது என்றால் எதைப்பற்றியும் சிந்திக்காமல் அவர்கள் சொல்வதை அப்படியே செய்திடும் பழக்கம் இன்னும் பலரிடம் இருக்கவே செய்கிறது. அதனை நாம் கைவிட்டாலே பல பிரச்சனைகளில் இருந்து நம்மால் தப்பித்துக்கொள்ள முடியும்.
>> தெரியாத ஒருவரிடம் இருந்து பரிசுத்தொகை என ஏதேனும் வந்தால் அதை உடனடியாக நீக்கி விடுங்கள்.
>> ஒருவரிடமிருந்து பணத்தை பெறுவதற்கு எந்த வங்கியும் ஆப்பும் உங்களது PIN எண்ணை கேட்பது இல்லை என்பதில் தெளிவாக இருந்திடுங்கள். அப்படி கேட்டால் எக்காரணத்தைக்கொண்டும் கொடுக்காதீர்கள்.
>> உங்களுக்கு வருகின்ற OTP எண்ணை எவரேனும் கேட்டால் எக்காரணத்தைக்கொண்டும் கொடுக்காதீர்கள்.
இதுபோன்ற பதிவுகளை பெறுவதற்கு எங்களது பேஸ்புக் பக்கத்தை பின்தொடருங்கள் அல்லது வாட்ஸ்ஆப் குரூப்பில் இணைந்திடுங்கள்
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.