Site icon Tech Tamilan

உலகின் அதிவேக கம்ப்யூட்டரை வடிவமைத்த கூகுள் | Quantum Computer

உலகின் அதிவேக கம்ப்யூட்டரை வடிவமைத்த கூகுள்

உலகின் அதிவேக கம்ப்யூட்டரை வடிவமைத்த கூகுள்

அமெரிக்காவின் summit கணினி 10,000 ஆண்டுகளில் செய்துமுடிக்கக்கூடிய கணக்கை வெறும் 3 நிமிடம் 20 நொடிகளில் செய்து முடித்துவிடுமாம் கூகுளின் புது கணினி. எத்தனை மனிதர்கள் சேர்ந்து முடிக்க வேண்டும் என கணக்கு போட்டு விடாதீர்கள் தலை சுற்றிவிடும்.

ENIAC [Electronic Numerical Integrator and Computer] இதுதான் உலகில் முதல் முதலாக பொதுப்பயன்பாட்டிற்கு வந்த கணினி. 1946 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்த இந்தக்கணினியால், ஒரு கணித மேதை மூன்று நாட்களில் செய்துமுடிக்கக்கூடிய கணக்கை சில நொடிகளில் செய்துமுடிக்க முடியும். பின்னர் பல்வேறு நிறுவனங்கள் ஆண்டுக்கு ஆண்டு போட்டிபோட்டு கணினியின் வேகத்தை கூட்டிக்கொண்டே வந்தன. 

அண்மைய ஆண்டுகளில் சீனாவின் Sunway TaihuLight சூப்பர் கம்ப்யூட்டர் அதிவேக கணினியாக இருந்தது. கடந்த ஆண்டு [2018], அமெரிக்காவின் Summit சூப்பர் கம்ப்யூட்டர் “உலகின் அதிவேக கம்ப்யூட்டர்” என்ற இடத்தை பிடித்தது. அமெரிக்காவின் summit கம்ப்யூட்டரின் செயல்திறன் எவ்வளவு தெரியுமா? ஒரு வருடம் முழுமைக்கும் ஒவ்வொரு நொடியும் 6.3 பில்லியன் மக்கள் இணைந்து செய்து முடிக்கக்கூடிய கணக்கை வெறும்  ஒரு நொடியில் செய்து முடித்துவிடும் அமெரிக்காவின் summit கம்ப்யூட்டர். ஒருவரே அந்த கணக்கை முடிக்கவேண்டும் எனில் 6.3 பில்லியன் ஆண்டுகள் ஆகும்.

உலகின் அதிவேக கம்ப்யூட்டரை வடிவமைத்த கூகுள்

தற்போது summit கணினியை விடவும் அதிக செயல்திறன் மிக்க புராசஸரை வடிவமைத்து இருப்பதாக கூகுள் அறிவித்து இருக்கிறது. அதன்படி அமெரிக்காவின் summit கணினி 10,000 ஆண்டுகளில் செய்துமுடிக்கக்கூடிய கணக்கை வெறும் 3 நிமிடம் 20 நொடிகளில் செய்து முடித்துவிடுமாம் கூகுளின் புது கணினி. எத்தனை மனிதர்கள் சேர்ந்து முடிக்க வேண்டும் என கணக்கு போட்டு விடாதீர்கள் தலை சுற்றிவிடும். இதற்கெல்லாம் வித்திட்டது குவாண்டம் தொழில்நுட்பம் தான். கூகுள் தவிர்த்து பலர் இத்தகைய குவாண்டம் கணினியை வடிவமைத்தாலும் கூகுள் தான் இத்தகைய வேகத்தை எட்டியிருப்பதாக தெரிவித்துள்ளது.

Quantum Computing என்றால் என்ன என்பதை எளிதாக இங்கே விளக்கி இருக்கிறோம் படியுங்கள்.

அதிவேக கணினியால் என்ன நன்மை?

அதிவேக கணினியால் அதிகப்படியான தகவல்களை ஒருங்கிணைத்து கணக்குகளை செய்திட முடியும்/முடிவுகளை எடுக்க முடியும். இன்னும் சில மாதங்களிலோ வருடங்களிலோ ஆட்டோமேட்டிக் கார்கள் சாலைகளில் வலம்வரத் துவங்கும். இப்போது உலகில் இருக்கும் தகவல்களைக் காட்டிலும் அதிகமான தகவலை ஒரு ஆட்டோமேட்டிக் கார் தரும் என கூறப்படுகிறது. அத்தனை தகவலையும் மிகவேகமாக கணக்கிட்டு முடிவுகளை எடுத்தால் மட்டுமே விபத்து போன்றவை ஏற்படாமல் ஆட்டோமேட்டிக் கார்களை இயக்க முடியும். 

அடுத்ததாக மருத்துவத்துறையில் பல்வேறு தீர்வுகளை எட்டிடுவதற்கு இப்படிப்பட்ட அதிகமான தரவுகளை மிக வேகமாக புராஸஸ் செய்கின்ற கணினிகள் அவசியம். இதுபோன்றே பல்வேறு துறைகளிலும் மிக அதிக அளவிலான தரவுகளை கையாளுவதற்கு இப்படிப்பட்ட கணினிகள் அவசியம்.

அதிவேக கணினியால் ஆபத்து என்ன?

முதல் ஆபத்து தகவல் பாதுகாப்பு – தற்போது தகவல் பாதுகாப்பிற்கு என்கிரிப்ஷன் என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. என்கிரிப்ஷன் என்பது உடைக்க முடியாத பாதுகாப்பு அல்ல. அதனை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அந்த என்கிரிப்ஷனை நீங்கள் உடைக்க வேண்டும் எனில் தற்போது உள்ள கணினிகளுக்கு சில ஆண்டுகள் பிடிக்கும் அவ்வளவுதான். ஆனால் கூகுள் தற்போது வடிவமைத்து இருக்கும் அதிவேக கணினி போன்றதொரு கணினி யாரிடமாவது இருந்தால் அவர்களால் எளிமையாக அந்த என்கிரிப்ஷனை சில நிமிடங்களில் உடைக்க முடியும். அப்படியானால் இன்னும் பாதுகாப்பான என்கிரிப்ஷனை வல்லுநர்கள் கண்டுபிடிக்க வேண்டிய தேவை ஏற்படும்.

 

தற்போது இருக்கும் நிறுவனங்களில் பொதுமக்களினுடைய அதிகப்படியான தகவல்களை வைத்திருப்பது கூகுள் தான். தற்போது அதிவேக கணினியும் சேர்ந்திருப்பதனால் அதிகப்படியான தரவுகளை அவர்களால் கையாள முடியும். 

 

தொழில்நுட்பம் யாருடைய கைகளில் இருக்கிறது என்பதைப்பொறுத்துதான் அது நன்மையா தீமையா என்பதனை நாம் தீர்மானிக்க முடியும்.

TECH TAMILAN

Exit mobile version